சென்ற வாரம் மன் கி பாத்தில் பிரதமர் அவர்கள் அம்பேத்கர் பற்றி கூறியது தற்செயலாய் கேட்டதும் (அம்பேத்கரின் மூல கருத்தான சாதியை கூறாமல்), UP முதல்வர் அம்பேத்கர் பெயரில் அவரது தந்தை பெயர் ராம்ஜியை இணைத்து சர்ச்சையை கிளப்பியது அம்பேத்கர் பற்றி படிக்க தூண்டியது.
இந்தியாவில் சாதிகள்: அம்பேத்கர்
1) 25 வயது இளைஞனின் சாதிகுறித்த ஆய்வறிக்கை, சரியாக 20 வருடங்கள் கழித்து அவர் ஆற்றவிருந்த ஒரு கூட்டத்தின் உரையும், இந்த உரை ஏன் ஆற்ற முடியாமல் போனது என்பதற்கான கடித பரிமாற்றங்களையும், காந்திஜியின் கருத்து (வருணத்தை ஆதரித்து) உள்ளடக்கியது இந்த 140 பக்க குறு புத்தகம்.
2) சாதிகளின் பிறப்பு, வளர்ச்சி அதன் இன்றைய நிலை (100 வருடங்களுக்கு முந்தைய நிலை, ஆனாலும் இன்றும் பெரிய வித்யாசம் இல்லை ) என ஆராய்கிறது அவரது அறிக்கை.
3) "பிறர் போல செய்தல்" என்ற மனித பண்பு சாதியை எல்லா தளங்களிலும் பரவச்செய்தது, பாதி கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு கூட்டம், இந்திய முழுவதும் தனி தனி சாதி கூட்டங்கள் நிரம்பிருந்தது அனால் இந்து என்ற ஒரு அமைப்பு இருந்ததில்லை என பல கருத்துகள் சிந்திக்க வைப்பவை.
4) சாதியால் சமூகம், பொருளாதாரம், நாகரீகம், பண்பாடு என அனைத்து தளங்களும் எப்படி சின்னாபின்னமாகிறது என்று விளக்குகிறார்.
5) "புத்த மதத்திற்கு மாறுவேன்" என்ற கருத்துக்களை நீக்கிவிட்டு பேசினால் இந்த உரையை ஆற்ற இந்த அமைப்பு அனுமதிக்கும் என சங்கத்தின் தலைவரையே கேள்விகேட்கும் (இன்று எந்த கட்சியிலும், சங்கத்திலும் நடக்காத ஒன்று) ஹர் பகவான் கடிதமும் அதற்கு அம்பேத்கரின் பதிலுரையும் சுவாரசியம்.
6) நாகரீகமற்ற மக்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என்பவர்களை இந்துக்கள் அடிப்படையிலே கை கொடுத்து உயர்த்த அவர்களின் சாதி அமைப்பு இடம் கொடுப்பதில்லை. ஆனால் பிற மதத்தினர் அந்த வேலையை செய்யவும் விட மாட்டார்கள். ஆகா இவர்களுக்கு இருப்பது இரண்டே வழி 1) அடிமையாய் இந்து என்ற பெயரில் வாழ்வது 2) குற்ற பரம்பரையாய் வாழ்வது. என கோடிடுகிறார்.
சாதி வேண்டும், வேண்டாம் என கூறும் அனைத்து நல் உள்ளங்களும் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்து மதம் சாதி விஷயத்தில் தன்னைதானே சுயபரிசோதனை செய்ய முயன்ற போதும் அதற்கு அதன் பழமைவாதிகள் முட்டுக்கட்டை இட்டுக்கொண்டதும் நன்றாக விளங்குகிறது.
படித்த பின், சுதந்திரத்திற்கு பின் நம்மை ஒட்டி சுதந்திரம் அடைந்த அல்லது மீண்ட நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் இன்னும் இந்த சாதியால் இழந்ததும் இழக்க போவதும் அதிகம் என்றும். அம்பேத்கார், பெரியார் சிந்தனைவாதிகளின் சிந்தனைகளை சுமந்து அடுத்த நிலை நோக்கி செல்வதை விடுத்து அவர்களுக்கும் முந்தைய அடிமை நிலை நோக்கி பயணிக்கிறோம் என்பது தெளிவாகும்.
இதன் முடிவில் சமஸ் அவர்கள் எழுதிய சாதி குறித்த இந்த கட்டுரையையும் படித்தல் நன்று.
http://writersamas.blogspot.in/2014/12/blog-post.html

Comments
Post a Comment